Wednesday, May 8, 2013

நெருடும் நினைவுகள்!

எத்தனை தூரம்
அன்பாய் இருந்தோம்!

முன்பு இந்தச்
சின்னஞ்சிறிய வீட்டில் நாங்கள்
எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்!

ஒரு பாய்த்துண்டில்
ஒன்றாய் உறங்கினோம்
ஒரே கலயத்தில் ஒன்றாய் உண்டோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீட்டைச்
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்தோம்!
இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்தோம்...!

பனிமழை தூவும் பகல் நிலவிரவில்
பண்பொடு ஒன்றாய்ப் படுத்துக் கிடந்து
சின்னஞ சிறிய எங்கள் வீட்டின்
சிறப்பை உயர்வைச் சிந்தனை செய்தோம்...!

இருந்தாற் போலொரு இரவுப் பொழுதில்
விண் மீன் கூட விழிக்கவும் இல்லை -
எங்களில் ஒருவன் படுத்த இடத்தில்
தீ நாக்கொன்று திடீரென் றெழுந்தது!

நெருப்புச் சுட்ட நண்பன் தனது
குரல்வளை நரம்பு தெறிக்கக் கத்தினான்...
அருகே படுத்தவன் நெருப்பின் புகையில்
கண்களைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டான்..!
ஒன்றாய் இருசரும் ஒரே மூச்சுடனே
வீட்டிலிருந்து வெளியே பாய்ந்தனர்!

நெருப்புச் சுட்டவன் உடம்பிற் சிற்சில
இரத்தக் காயம் விழித்துப் பார்த்தது..
அருகே படுத்தவன் கைகளிலி கூட
இரத்தம் கசிந்தது... துடைத்துக் கொண்டான்...!

கூக்குரல் வீட்டை விட்டும் வெளியே
வந்தது... பலரை வியக்கச் செய்தது..
ஆச்சரியத்தால் அதிர்ந்து நின்றோம்!

எப்படி நடந்தது...?
இஃது நடந்தது எப்படி என்று
ஆய்வுகள் செய்தோம்!

விளைவாய் நாங்கள்
எங்களுக்குள்ளே எதிரிகளாயினோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீடு
போர்க்களமானது... அடிக்கடி புகைந்தது...

எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்...

சின்னஞ்சிறிய எங்கள் வீட்டை
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்..

இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்...

ஆத்மா கிடந்து அடித்துக் கொள்ள
அழுகை கண்ணைக் கீறித் துளும்பும்!

சாத்தியமில்லா நினைவுகள் அவைகள்!

இனிமேல்.. இனிமேல்...
கனவுகள் அவைகள்!

(21.07.1985ல் எழுதப்பட்ட இக்கவிதை “காணாமல் போனவர்கள்” என்ற எனது முதலாவது கவிதைத் தொகுதியில் முதற்கவிதையாக இடம்பெற்றுள்ளது)

Monday, May 6, 2013

அஸாத் சாலியுடன் உடன்பட முடியாது!



சகோதரர் அஸாத் சாலியின் உடல் நிலை மோசமாக இருப்பதாக வெளிவரும் செய்திகள் நம்மைப் பெருங் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

“செய், அல்லது செத்து மடி” என்ற போக்குக் கொண்ட,நியாயத்தையும் உண்மையையும் வெளிப்படையாகப் பேசும் தைரியமும் துணிச்சலும் உள்ள ஓர் அரசியல்வாதியாக மட்டுமன்றி சிறுபான்மை என்ற காரணத்துக்காக முஸ்லிம்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுவதைக்
கண்டிக்கும் ஒருவராகவும் அவர் விஸவரூபம் எடுத்திருக்கிறார்.

முஸ்லிம்களாக இருந்தாலென்ன, நாங்கள் இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நேற்றுவரை விகற்பங்கள் ஏதுமின்றி, ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றோம் -  இன்றும் வாழ்ந்து வருகிறோம் என்பதைக் குரலுயர்த்திப் பேசும் அவரது தைரியமும் மனோ உறுதியும் பாராட்டத் தக்கது.

ஒற்றுமை தவிர வேறு எந்த எண்ணங்களுமின்றி வாழ்ந்து வரும் எம்மீது இன ரீதியாக, சமய ரீதியாகக் குழப்பங்களை நியாயமற்ற விதத்தில் ஏற்படுத்து வோருக்கெதிரான கோபத்தைக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்து இளைஞர்களில் ஒரு சாராரின் சீற்றத்தின் வடிகாலாக அவர் இயங்கினார் என்பது அவருக்கு ஒரு தனி மரியாதையைத் தற்போது தோற்றுவித்துக்
கொடுத்துள்ளது.

ஜெனரல் பொன்சேகா, இலங்கைச் சிறுபான்மையினர் வந்தேறு குடிகள் என்ற அடிப்படையி்ல் கனடியச் சஞ்சிகைக்குத் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு ஆதரவளிக்க முடியாது என்று, தான் நீண்ட காலமாக இருந்து வந்த கட்சியை உதறியவர் அஸாத் சாலி. தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொடங்கி முஸ்லிம்களுக்கெதிரான செயல்பாட்டில் பெரும்பான்மையின் ஒரு பிரிவினர்
ஈடுபட ஆரம்பித்ததும் தனது நியாயத்தை நாட்டுத் தலைவருக்குத் தெரிவித்தார். அது கணக்கில் கொள்ளப்படாத போது அந்த உறவையும் அறுத்துக் கொண்டார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போது கட்சி முஸ்லிம்களுக்கெதிரான பெரும்பான்மை - குறிப்பாக பிக்குகளின் நடவடிக்கை பற்றி மக்களின் கோபத்தை தேர்தல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. அரசு இவ்விடயத்தில் பாராமுகமாக இருக்கிறது என்பதைத் தேர்தல் மேடைகளில் மிகக் காரசாரமாகச் சுட்டிக்
காட்டியவர்களில் ஒருவர் அஸாத் சாலி. தேர்தல் முடிந்ததும் எந்த அரசைக் கட்சி சாடியதோ அதே கட்சியுடன் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் கட்சித் தலைமை தள்ளப்பட்ட போது கட்சியையும் தலைமையையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

அரசியரோடு சேர்த்துப் பார்த்தாலும் அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும் அஸாத் சாலியின் சமூக உணர்வு மெச்சத்தக்கது. ஆனால் அது அவரது அரசியல் கணக்குக்கே சென்று சேரும் என்பதால் அரசியல் கணக்காகவே யாவும் பார்க்கப்படும்.

எந்த அரசாக இருந்த போதும் அது தன் நலனுக்காக எந்தப் பேயுடனும் பிசாசுடனும் கைகோத்துக் கொள்ளும் என்பது அரசியலில் அரிசுவடிப் பாடம். இதைத் தெரிந்து கொள்ளாதவராக அஸாத் சாலி இருந்திருக்க மாட்டார்.

ஆகக்குறைந்தது 30 வீதமாவது ஜனநாயகத்தையும் தர்மத்தையும் பேணும் இடத்திலல்லாமல் வேறு இடங்களில் அவற்றை உரத்த குரலில் பேசுவதானது, நிர்வாணிகள் திரியும் ஊரில் ஆடையுடுத்திச் செல்வதற்கு ஒப்பாகும். இந்த விடயம்தான் நம்மவர் பலருக்குப் புரியாத, புரிந்தாலும் தம்மை எதிர்ப்போர் மீது ஒரு கோபத்தை வெளிக்காட்ட உணர்ச்சிகளுக்கு
இடமளிக்கின்ற நிலையாகும்.

கடந்த காலங்களில் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் அரசியல் கொலைகள், ஜனநாயகக் குரல்களை நசுக்குதல் போன்றவற்றிலிருந்து மட்டுமன்றி கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றிலிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. ஆனால் வரலாற்றிலிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்வதில் தவறுகளை விட்டு விடுவதுதான் துர்ப்பாக்கியமாக இருந்து வருகிறது.

இரண்டாவது சிறுபான்மையினராக வாழும் நாம் நமது எல்லாவிதச் செயற்பாடுகளிலும் “ஹிக்மத்”தைக் கைக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறும் உணர்ச்சிகளுக்கு எப்போதெல்லாம் அடிமைப் படுகிறோமோ அப்போதெல்லாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்று அர்த்தம். இவ்வாறு நான் சொல்வது பலருக்கு எரிச்சலையும் சினத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் என்றைக்கும் அதுதான் உண்மை!

ஹிக்மத்தைப் பயன்படுத்தாத எமது எந்தக் குரலும் எந்தப் போராட்டமும் எந்த எதிர்ப்பும் “ஒரு ரோஹின்யாவை” கண் முன்னே சந்திக்கச் செய்யும் செயற்பாடாகவே இருக்கும். அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்காமல் குப்புறப் படுப்பது என்பது இந்த வார்த்தையின்  அர்த்தமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அஸாத் சாலியின் பலத்த எதிர்ப்புக் குரல் சமூகத்தில் பலருக்குத் திருப்தியை, சந்தோஷத்தை, நிம்மதியைக் கொடுத்துத்தானிருக்கிறது. ஆனால் அதற்காக அஷாத் சாலி செலுத்தும் விலை மிகப் பெரியது. அதற்காக வருந்தப் போவது அவரது குடும்பத்தினர்தாம்!

தான் கைது செய்யப்பட்டது நியாயமற்றது என்பதற்காக உண்ணாமல் குடிக்காமல் அவர் பிடிவாதம் பிடிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொது வாழ்வு என்று இறங்கி விட்டால் இவற்றையெல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். அதற்காக அவர் தன்னை வருத்திக் கொள்வது அவரது பிள்ளைகள், மனைவி, உறவினர் மட்டுமன்றி அவர் மீது
நம்பிக்கையும் அன்பும் கொண்டிருக்கும் சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கும் செயலாகும். எனவே அவர் மேற்கொள்ளும் உண்ணாமைப் போராட்டத்துடன்
நம்மால் உடன்பட முடியாமல் இருக்கிறது.

சமூகத்துக்காகக் குரல் கொடுக்கிறார் என்பதற்காக இன்று அவரின் பின்னால் நின்று உற்சாகமளிப்பவர்களும் மகிழ்பவர்களும் அவருக்கு ஏதாவது நிகழுமெனில் (அல்லாஹ்  காப்பாற்றுவானாக)ஒரு பாத்திஹாவோடு மறந்து போய்விடுவார்கள்.

இதைத்தான் சகோதரர் அஸாத் சாலி உணர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும். அவருடன் இணைந்து செயற்படும் சகோதரர்கள், அவரது நெருக்கமான நட்புக்குப் பாத்திரமானவர்கள் அவருடன் பேசி முதலில் அவரை ஆகாரம் உட்கொள்ள வைக்கும் முயற்சியைச் செய்ய வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் ஓர் அரசியல்வாதி என்ற வகையில் சமூகத்துக்காக என்று எதைச் செய்தாலும் அது அரசியலாகவே பார்க்கப்படும். அவரது போராட்டம் சத்தியமானதுதான். நேர்மையானதுதான். குற்றங்களைச் செய்தார் என்று சொல்லப்படுகிறதே தவிர, என்ன குற்றங்கள் என்று இதுவரை
சொல்லப்படவில்லை.

தடுத்து வைக்கட்டும். காவல் செய்யட்டும். விசாரணை செய்யட்டும். நீதி மன்று ஒரு தீர்ப்புச் சொல்லட்டும். மக்கள் மன்றிலும் இறைவனின் மன்றிலும் அவருக்குச் சரியான தீர்ப்பு ஒன்று காத்திருக்கிறது அல்லவா?

எந்தச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்தாரோ எந்தச் சமூகத்தின் நன்மைக்காகப் போராடினாரோ அந்தச் சமூகத்துக்காக அவர் வாழவேண்டாமா?

இதை யாராவது அவருக்கு எத்தி வையுங்கள். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்!

Sunday, May 5, 2013

செம்மறி ஆடுகள்!



இலங்கையில் இளம்பிள்ளைவாதம் என்கின்ற போலியோ வைத் தடுப்பதில் வெற்றி எய்தப்பட்டுள்ளதை அவ்வப்போது கிடைக்கும் தகவல்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே தினத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் சிறாருக்கும் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். சர்வதேச விமான நிலையங்களில்கூட இம் மருந்து வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து டாக்டர் (கவிஞர்) தாஸிம் அகமதுவைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது இம்மருந்து கொடுக்கப்பட்ட நாடுகளில் காலாவதியான மருந்துகள் பாவிக்கப் பட்ட இடங்கள் தவிர மற்றப்படி 99.5 சதவீத வெற்றிதான் என்று தெரிவித்தார். செய்தி சந்தோஷமளிக்கக் கூடியதுதான்.

இன்று இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காண்பது அரிதாகியிருக்கிறதே தவிர ஓரு காலையோ இரண்டு கால்களையுமோ இழந்தவர்களைக் காண்பதற்கு முடியுமாயிருக்கிறது. இதில் சிறுவர் முதற் கொண்டு முதியோர் வரை அடங்குகின்றனர். இவர்களது கால்களைக் கவர்ந்து சென்றவை நம் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிகள்.

போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட காலப் பிரிவில் மிதி வெடிகளை அகற்றுவதற்காக வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த குழுவில் ஒருவரைத் தற்செயலாக நான் சந்திக்க நேர்ந்தது. அனுவங்களைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்:- 'ஒவ்வொரு மிதி வெடியையும் அடையாளங் கண்டு அகற்றும் போதும் ஓர் உயிரைக் காப்பாற்றி விட்டதான அல்லது ஒருவரின் ஊனத்தை - அதனால் சம்பந்தப்பட்டவரது குடும்பத்தில் விளையும் துயரங்களை நான் தடுத்து விட்டேன் என்கிற ஆறுதலும் திருப்தியும் ஏற்படுகின்றன.' மகத்தான அதேவேளை ஆபத்தான அவர்களது சேவைக்காகப் பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

அன்றைய தினம் முழுவதும் மிதி வெடிகளும் அது பற்றிய அபாய அறிவிப்புப் பலகைகளும் 'மிதி வெடிகள் உள்ளன' என்று மஞ்சள் நிறப் பட்டிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் இடங்களும் கால்களை இழந்த மனிதர்களும் நினைவில் சுழன்று கொண்டிருக்க அன்றிரவு எனது கவிஞன் விழித்துக் கொண்டான்.

போலியோச் சொட்டருந்தி
விளையாடச் சென்றவனைத்
தூக்கி வந்திருந்தார்கள்
கால் ஒன்றை இழந்திருந்தான்-
மிதி வெடியில்!

இலங்கையில் ஒரு காலத்தில் இந்திய அமைதிப்படை இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்ததே. விடுதலைப் புலிகளுட னான மோதலில் மிதி வெடி ஆபத்தை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தங்களுக்குப் பரிச்சயம் அற்ற சூழலில் அவர்களில் பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்பட்ட போது அதைத் தவிர்ப்ப தற்காக ஒரு காரியம் செய்தார்கள். அதில் புத்திசாலித் தனமான இரட்டை நோக்கம் இருந்தது.

இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக செம்மறி ஆடுகள் வந்திறங்கின. ஒவ்வொரு இராணுவக் குழுவும் ஒரு செம்மறிக் கூட்டத்தை முன்னால் நடக்க விட்டுப் பின்னால் நடந்தது. முன்னால் செல்லும் ஆடுகள் கண்ணிவெடிகளில் அகப்பட்டால் அவை அக்குழுவினரின் அன்றைய உணவாக மாறியது. ஆடுகள் பொதுவா கவே துரத்தினால் கலைந்து வெவ்வேறு பக்கங்களில் தறி கெட்டு ஓடுவன. ஒன்றைச் சொல்ல வேறு ஒன்றைச் செய்பவனை 'எட செம்மறி' என்று அழைப்பதும் சொன்னதை உடனடியாகப் புரிந்து கொள்ளாதவனை 'இவன் ஒரு செம்மறியடா' என்று திட்டுவதும் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

திருமதி பார்பரா வோல்டர்ஸ் சர்வதேச தொலைக் காட்சிச் சேவையொன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஆப்கானிஸ்தானில் அரசியல் சிக்கல்கள் மும்முரமடைவதற்கு முன்னர் நிகழ்ச்சிகளுக்காகச் சென்று வந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் ஆண்களின் பின்னால் கிட்டததட்ட ஐந்து அடி இடைவெளியில் நடந்து வருவதை அவதானித்திருந்தார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்து பின்னர் அவர்களது ஆட்சியும் அதிகாரமும் தூக்கி வீசப்பட்டு இன்று அமெரிக்க ஆசீர்வாதத்துடனான அரசு ஆட்சியில் இருக்கிறது.

மிக அண்மையில் அங்கு சென்ற பார்பரா பெண்கள் ஆண்களுடன் சமமாக நடந்து வராமல் இன்னும் வழமை போல் பெண்கள் பின்னால் நடந்து வருவதை அவதானித்தார். சொல்லப் போனால் முன்னரை விட மேலும் சில அடிகள் பின்னால் ஆனால்  மகிழ்ச்சியுடன் நடந்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

ஒரு பெண்ணை அணுகி, 'ஒரு கட்டத்தில் ஆண்களுடன் சரிசமமாக நடந்து செல்லக் கோரிக் கொந்தளிப்பெல்லாம் நிகழ்ந்ததல்லவா..? இப்போது அதற்கு எந்தத் தடையும் இல்லாத போது ஏன் பழைய வழக்கத்தை மாற்றாமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அந்தப் பெண் பார்பராவை சில கணங்கள் நேராகப் பார்த்தவாறு புன்முறுவலுடன் சொன்னார்: 'கண்ணிவெடிகள்!;'

நீதி: ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு புத்திசாலித்தனமான பெண் இருக்கிறாள்!


03.08.2008
(தீர்க்க வர்ணம் - பத்தித் தொகுப்பிலிருந்து)

Saturday, April 27, 2013

“வாக்குமூலம்“ - மஹ்மூத் தர்வேஷ்



புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர் மறைந்த மஹ்மூத் தர்வேஷ் எழுதிய “அடையாள அட்டை” என்ற கவிதை உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது. இந்தக் கவிதையை பலஸ்தீன பெண் கல்வியியலாளர் படிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அரபியிலும் ஆங்கிலத்திலும் அக்கவிதை படிக்கப்படுகிறது. அரபியில் படிக்கும் போது அவர் தன் சொந்த நிலம் குறித்துக் கலங்குவதை அவதானிக்கலாம். இது கவிதைக்கும் கவிஞனுக்கும் கிடைத்த வெற்றி.


video

இக்கவிதையை “வாக்குமூலம்” என்ற தலைப்பில் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கே தரப்படுகிறது. பலஸ்தீனக் கவிதைகள் என்ற எம்.நுஃமானின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.

வாக்குமூலம்

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
எனது அட்டையின் இலக்கம் 50,000
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன்
கற்களை உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும்
ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ்
முழந்தாழ் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
யுகங்களுக்கப்பால்
காலத்துக்கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன

உழவர் குலத்தின் எளிய மகன் நான்
வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான்
எனது தலைமுடி மிகவும் கறுப்பு
எனது கண்கள் மண் நிறமானவை
எனது அரபுத் தலைஅணி
ஆக்கிரமிப்பாளரின் கைகளைப் பிறாண்டும்

அனைத்துக்கும் மேலே
தயவு செய்து இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்

கவனம்!
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்!
எனது சினத்தை அஞ்சிக்
கவனமாயிருங்கள்!


video

மஹ்மூத் தர்வேஷ் குரலில் அவரது கவிதை

video

இக்கவிதை George Qurmuz குரலில் இனிமையான ஒரு பாடலாக...

Thursday, April 25, 2013

ஒற்றுமைக் கயிறு - ஒலி நாடகம்


23.04.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான “ஒற்றுமைக் கயிறு” என்ற - நான் எழுதிய வானொலி நாடகம்.

video

பகுதி -1


video

பகுதி - 2


video

பகுதி - 3


video

பகுதி - 4




Monday, April 22, 2013

புரட்சிக் கமால் கவிதை!




நோக்கு

புரட்சிக் கமால்


நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

ஒல்லியாய் வடிந்து, கூனி
ஒடிந்த வில் ஆவான், அண்ணன்!
கல்லெனத் திரண்டு, சின்னக்
களிற்றினை ஏய்ப்பான் தம்பி!
முல்லையே தங்கை! நானோ
முருக்கையின் பிரதி! இந்தப்
பல்லுருப் பேதத்தோடு
பயந்தவர் ஒரு தாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

நிறத்தினில் அண்ணன் நெய்யை
நிக்த்தவன்! தம்பி சாயல்
வறுத்தநாட் டரிசி! என்றன்
வண்ணமோ கழுகுப் போர்வை!
உரித்தமாங் கனியாள் தங்கை!
ஒரு படிப் பாலில் இந்த
நிறத் தொகை எதனால்? எம்மை
நிறுத்தவர், ஒரு தாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

ஓவியப் புலவன் அண்ணன்
ஒளி நிழல் கரைவான்! இந்தப்
பாவியோ, அப்பனோடு
கழனியில் மாடு, தம்பி
சேவைகள், மற்போர், ஆட்டம்
திருவிழாப் பருகும்! எங்கள்
பூவையோ, கூண்டுக் கிள்ளை!
பெற்றவர், ஒருதாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

வீட்டுக்குள் - ஒருதாய், தந்தை
விளைச்சலின் ஊழல் கோடி!
நாட்டுக்குள் - மேடு, பள்ளம்
வெயில் - மழை, கூதலென்று
காட்டுக்கூப் பாடு போட்டே
கடவுளில் “நோக்கு” நாட்டி
வேட்டுக்கள் தீர்ப்பான், தம்பி
வெறும்பயல், விடுங்கள் பாவம்!

(நன்றி - புரட்சிக்கமால் கவிதைகள்)

Sunday, April 21, 2013

அழுவதற்கென்று பிறந்தவர்கள்!



எனது வீட்டிலிருந்து கூப்பீடு தூரத்தில் (15 யார்கள்) ஓர் அரச பாடசாலை இருக்கிறது.

நேற்றுக் காலை 8.00 மணிக்கெல்லாம் அப்பாடசாலையிலிருந்து ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மிகப் பழைய சிங்களப் பாடல்கள். அநேகமாகவும் 80களுக்கு முந்திய பாடல்களாக இருக்க வேண்டும். பாடல்களின் பின்னணியில் இசையை மீறிய இரைச்சல். இருந்த போதும் அதில் ஒரு பாடலின் மெலடி என்னை வெகுவாகக் கவர்ந்தது.

நெருக்கம் மிகுந்த - ரெசிடன்டல் ஏரியா - என்பதால் பொது நிகழ்வுகள் அவ்வப்போது இப்பாடசாலையில் நடைபெறுவதுண்டு. படிக்கும் மாணவர் தொகை சொற்பம். பெரிய மைதானம் உண்டு.

புதுவருடக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்று நினைத்தேன். பொதுவாக சிங்கள - தமிழ் புத்தாண்டு வந்தால் மாதம் முடியும் வரைக்கும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

பத்து மணியளவில்ஏரியாப் பாடகர்கள் இசை இல்லாமல் பாடிக் கொண்டிருந்தார்கள்.  பதினைந்து பதினாறு வயதுக்குக் குறைந்தவர்கள் போல் இருந்தது.ஒரு கிராமத்தில் புதுவருடத்தில் பாட முடிந்தவர்கள் பாடுகின்ற ஏற்பாடு போல் தெரிந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் “சமுர்த்தி பெறும் குடும்பத்தினர் மட்டும்” என்று அறிவிப்பாளர் ஒலிவாங்கியில் கமறிக் கொண்டிருந்தார். இங்கு என்னதான் நடக்கிறது என்று என்னால் மட்டிட முடியவில்லை.

10.30 போல் கடைக்குச் செல்வதற்காக வெளியேறிய போது பாடசாலை கேற்றில் இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு பெனர் கட்டப்பட்டிருந்தது. “சமுர்த்திக்
கொண்டாட்டம்” என்று சிங்களத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது.

அந்த பெனரின் அளவு என்ன தெரியுமா? ஒன்றரைக்கு ஒன்றரை அடிகள்தாம். அடடா... குறைந்த  வருமானம் பெறும் மக்களுக்கான விழாவைக் கூட மிக மிகச் சிக்கனமாக “சமுர்த்தி” ஏற்பாடு  செய்திருக்கிறது என்று மகிழ்ந்தேன். வறுமையில் வாழும் மக்களைச் சந்தோஷப்படுத்தும் ஒரு முயற்சியாகத் தெரிந்தது. அட... பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயத்தை “சமுர்த்தி” செய்கிறது என்று உள்ளம் பூரிப்படைந்தது.

“ஜனசவிய” என்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்காக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பிரதமராக இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம். சந்திரிக்கா அமையாரின் காலத்தில் “சமுர்த்தி” என்று பெயர்மாற்றம் பெற்றது. பிறகு அது ஒரு அமைச்சாக மாறி மகிந்தர்
ஆட்சியில் அமைச்சே இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் திட்டம் நடைபெற்று வருகிறது.

அடுத்த கணம் மனது மாற்றிச் சிந்தித்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் கொண்டாட்டத்துக்கெல்லாம் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை என்று நினைத்து விட்டார்களோ என்று நினைப்பு வந்தது. ஒரு கட்டடத்தைத் திறந்து வைக்கும் அரசியல்வாதிக்கு 50 க்கு 20 அடிகளுக்கு கட்அவுட் வைக்கும் அதிகாரிகள் ஏழைகளின் விழாதானே என்று ஒன்றரைக்கு ஒன்றரை பெனர் போட்டிருக்கிறார்களாக்கும் என்றே எண்ணினேன்.

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஸ்பீக்கரில் சிறுவர்களும் சிறுமியரும் கதறிஅழும் சத்தம் கேடடது. காது கொடுத்துக் கேட்டால் அது அழுகைப் போட்டி.

விசித்திரமான போட்டியாக இருக்கிறதே. சிறுவர் சிறுமியர் எந்தக் காரணத்துக்காக அழுகிறார்கள் அல்லது அழ எண்ணுகிறார்கள் என்று “சமுர்த்தி” கணிப்பீடு செய்து ஏதாவது நல்ல முடிவுக்கு வரப் போகிறதாக்கும் என்று மீண்டும் மனதுக்குன் பாராட்டியபடி காதைக் கூர்மைப்படுத்தினேன்.

 அவ்வாறு ஒன்றும் இல்லை...

நன்றாக அழுபவருக்குப் பரிசு அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது...

இப்போது ஜூட் அழுவார்...

“ஐயோ... அப்பா அடிக்க வேண்டாம்... ஐயோ... ஐயோ... ஆ... ஊ....” என்ற
அழுகைச் சத்தம்.

இப்போது முனீரா அழுவார்...

ஓவென்ற அழுகை... அம்மா அடித்ததாக அப்பாவிடம் சொல்லித் தேம்பியழுகிறாள்...

இப்போது புவனா....

சகோதரன் அத்து விட்டானாம்... அதே அழுகை!

ஒவ்வொரு அழுகையும் முடியப் பலத்த கைதட்டல்...

சரிதான்!

அதிகரிக்கும் விலைவாசியால், உழைப்புக்குரிய ஊதியம் கிடைக்காமையால்,
கல்விக்குரிய தொழில் கிடைக்காமையால், கூடிய சீக்கிரம் “சமுர்த்தி ” உதவியும் குறைக்கப்பட்டால்...எதிர்காலத்தில் ஏழைகள் வாய்விட்டு அழவேண்டும் என்பதற்காகப்  போட்டிவைத்து அழப்பழக்குகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்!

Saturday, April 20, 2013

காலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்!



மரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள்.

மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு முன்னர் வெளிப்படுத்திய சொல்லோ வார்த்தையோ அத்தருணத்தின் பெறுமதியாலும் அம்மனிதனின் மனோ நிலையினாலும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. ஒரு துயரக் கவிதை போல அவ்வார்த்தைகள் சக்தி மிக்கவையாகி விடுகின்றன| வாழும் வரத்தைப் பெற்று விடுகின்றன.

வாழ்க்கை என்பது இவ்வுலகில் ஒரே ஒரு முறைதான் வாய்க்கிறது. அதை இழக்கும் கையறு நிலையில் சிலர் சொன்னவற்றை இங்கு தருகிறேன்.

இத்தாலியின் சர்வாதிகாரி பெனிற்றோ முசோலினிக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தப்பட்டவேளை, தனது மேலாடையை விரித்து அவர் சொன்ன கடைசி வார்த்தை 'என் நெஞ்சில் சுடு!' தூக்கிலிடப்பட்ட ஈராக்கின் தலைவர் சத்தாம் ஹூஸைன் மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் தனது நெஞ்சில் சுட்டு அதனை நிறைவேற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளைச் சட்டைசெய்யாமல் தூக்கில் தொங்க விடப்பட்ட போது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது (ஸல்) இறைவனின் தூதராவார்' என்ற வார்த்தைகளை மொழிந்தார்.

1886ல் சிகாகோ குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட ஜோர்ஜ் ஏங்கல் சொன்னார்:- 'அராஜகத்துக்கு வாழ்த்துக்கள். இது எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நேரம்!' அவுஸ்திரேலியாவின் தேசிய வீரர் என மதிக்கப்படும் கவிஞர் ஹரி ஹார்போர்ட் 1902ல் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சொன்னார்:- 'தேவடியாப் பசங்களே, நேராகச் சுடுங்கள். அங்கிங்கு சுட்டு விடாதீர்கள்.' அமெரிக்காவின் தேசிய வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் நாதன் ஹேல் பிரித்தானியாவில் உளவு பார்த்த குற்றத்துக்காகச் சுட்டுக் கொல்லப்படும் வேளை சொன்னார்:- 'எனது நாட்டுக்கெனத் துறப்பதற்கு ஒரே ஓர் உயிர் மாத்திரமே இருப்பதற்காக வருத்தப்படுகிறேன்.'

முற்காலத்தில் மரண தண்டனை விதிப்பதற்காகப் பயன் படுத்தப்பட்ட கழுத்தை வெட்டும் இயந்திரம் 'கில்லட்டின்' என்று அழைக்கப்பட்டது. இவ்வியந்திரம் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் 14ம் லூயி, 'நான் அப்பாவியாகச் சாகிறேன். எனக்கேற்பட்ட இந்நிலைக்குக் காரணமானவர்களை நான் மன்னித்து விடுகிறேன்' என்று குறிப்பிட்டார். 1618ல் சிரச்சேதம் செய்யப்பட்ட சேர் வோல்டர் ரலீ என்பார் இவ்வாறு சொன்னார்:- 'இதயம் சரியாக இருக்கிறது. தலை எந்தப் பக்கம் கிடக்கும் என்பதைப் பற்றிக் கவலை யில்லை.'

 மின்சாரக் கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட இருவரது இறுதி வார்த்தைகள் இரண்டு அர்த்தங்களைத் தருகின்றன. 1928ல் ஜோர்ஜ் அப்பல் 'சரி, கனவான்களே... அவிக்கப்பட்ட அப்பிளைப் பார்ப்பதற்கு நீங்கள் தயாராகிறீர்கள்' என்றார். ஜேம்ஸ் பிரென்ச் என்பவர் கவித்துவமாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் சொன்னார் இப்படி:- 'நாளையப் பத்திரிகையில் இப்படித் தலைப்புச் செய்தி இடம்பெறுமாக இருந்தால் எப்படி யிருக்கும்? 'ஃபிரென்ச் ஃபிரைஸ்!'

 ஊசி மூலம் விஷம் செலுத்தியும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நாம் அறிந்ததே. 1993ல் அவ்வாறு தண்டனை வழங்கப்பட்ட லயனல் ஹெரேராவின் வார்த்தைகள் பரிதாபமானவை. 'நான் அப்பாவி! அப்பாவி!! அப்பாவி!!! எந்தத் தவறும் விட்டவனில்லை. சமுதாயத்துக்கு நான் நன்றிக் கடன் பட்டவன். உண்மையில் நான் ஓர் அப்பாவி. இந்த இரவில் ஒரு மோசமான தவறு இடம் பெறப் போகிறது.' 1997ல் மாரியோ பென்ஜமின் மேர்பி சொன்ன இறுதி வார்த்தைகள்:- 'இன்றைய தினம் இறப்பதற்கு நல்ல தினம். நான் உங்கள் எல்லோரையும் மன்னித்து விடுகிறேன். கடவுளும் அவ்வாறே செய்வார் என்று நம்புகிறேன்.'

கார்லா டக்கர் ப்ரவுன் தனக்குத் தண்டனை வழங்கப்படு முன்னர், 'நான் இப்போது யேசு நாதரை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறேன். நான் உங்கள் அனைவரையும் மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அங்கு வரும் போது சந்திப்பேன். நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்' என்று சொன்னார்.

2000ஆம் ஆண்டு டென்னி டெம்ப்ஸ் என்பவருக்குத் தண்டனை வழங்குவதற்கு 33 நிமிடங்கள் எடுத்தனவாம். ஊசி மருந்து செலுத்துவதற்கான சரியான நரம்பைக் கண்டு பிடிப்பதற்கு மட்டுமன்றி மற்றொரு ஊசி மருந்தைத் தயார் படுத்திக் கொள்வதற்குமே இவ்வளவு நேரம் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. தண்டனை வழங்கப் பட்ட நபர் இழைத்த குற்றம் அல்லது அவரது உடலமைப்புக் குறித்துத் தண்டனை வழங்குவோர் மேற்கொண்ட முன் எச்சரிக்கையாக அது இருந்திருக்கலாம். ஆனால் டென்னிஸ் இவ்வாறு சொன்னார்:- 'எனது அடித் தொடையை, காலையெல்லாம் வெட்டினீர்கள். நான் அதிகம் இரத்தம் சிந்தினேன். இது மரண தண்டனை அல்ல| கொலை!' 1993ம் ஆண்டு ஜேம்ஸ் அலன் ரெட்டுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள்:- 'பேபி, நான் வீட்டுக்குப் போகிறேன்.'

 ரொபர்ட் ட்ரோ என்பார் தனக்கு தண்டனை வழங்கப்பட்ட போது உறுதிபடச் சொன்ன கடைசி வார்த்தைகள்:- 'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மரண தண்டனை என்பது ஒரு படுகொலையாகும்.'

1989ம் ஆண்டு சீன் பிளான்னகன் என்பாருக்கு தண்டனை யளிப்பதற்குரிய ஊசிமருந்தை ஏற்றியவரைப் பார்த்து சீன் சொன்னார்:- 'ஐ லவ் யூடா... செல்லம்!'

 25.05.2008
 (தீர்க்க வர்ணம் என்ற எனது பத்தியெழுத்துத் தொகுப்பு நூலிலிருந்து)


Thursday, April 18, 2013

உன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா?



இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார்த்தோம். அவர்களிடம் இலங்கை முஸ்லிம்களின் இருப்பு, மத சுதந்திர அச்சுறுத்தல் பற்றிய ஜனாதிபதியின் பதிலுக்கு அப்பால்
முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ராஜதந்திர மட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அவதானத்துடன் இருக்கிறோம் என்ற செய்தியை இலங்கைக்கும் முழு உலகுக்கும் உணர்த்தியிருப்பதானது ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.

மேற்படி ஒன்றுபட்ட கலந்துரையாடலுக்குச் சென்ற நாடுகளில் அரபு நாடுகளும் உள்ளன. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தமது சகோதர உணர்வைப் பிரதிபலிக்கும் அதே வேளை அவர்கள் மீது குறிப்பாக அரபு நாடுகள் மீது ஒரு முக்கியமான கடமை உண்டு.

தமது நாடுகளில் தொழில் நிமித்தம் பணிபுரியும் பிற நாட்டவர்களை - குறிப்பாக ஆசிய நாட்டவர்களை - அந்நாடுகளிலுள்ள வேலை கொள்வோர் கசக்கிப் பிழிவதும் துன்புறுத்துவதும் தண்டிப்பதும் நிறுத்தப்படுவதற்கு இந்நாடுகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்.

இத்துன்புறுத்தல்களும் கொடுமைகளும் இனம், மதம் என்ற வித்தியாசத்துக்கப்பால் அங்கு  நடைபெற்று வருகின்றன. தன்னை வீட்டு எஜமான் நிர்வாணப்படுத்திக் கொடுமைப் படுத்தியதாக மிக அண்மையில் சவூதியிலிருந்து வந்த ஒரு சிங்களப் பெண் தெரிவித்திருக்கிறார். இவ்வாறான
கொடுமைகள் பற்றிய கதைகள் இணையத்திலும் ஊடகங்களிலும் ஆயிரமாயிரம் கிடைக்கின்றன. மனிதாபிமானமற்றமுறையில் அரபிகள் நடந்து கொள்வது வெறும் முஸ்லிம் நாட்டின் பண்புகளையும்
கலாசாரப் பழக்கவழக்கங்களை மட்டுமல்ல, இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியையும் கேள்விக்கு  உட்படுத்துவதாகும்.

வேலைக்குச் செல்லும் எல்லோரும் இஸ்லாம் பற்றி 50 வீதமாவது அறிந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அநேகமானோர் படிப்பறிவில் குறைந்தவர்கள். எனவே முஸ்லிம்கள் வாழும் தேசங்களில் இஸ்லாம் வாழ்க்கை வழி என்று சொல்லிக் கொள்ளும் தேசங்களில் மனிதாபிமானமற்ற
கொடுமைகள் நடப்பதை “வாளினால் கழுத்தை வெட்டுவது” என்ற தண்டனைப் பார்வையிலிருந்தே அவர்கள் பார்க்க முனைவார்கள். இது முஸ்லிம்கள் பற்றிய மிக மோசமான மனப்பதிவை இவ்வாறான
கொடுமைகளுக்கு உள்ளாகுவோருக்கும் அவர்கள் குடும்பத்தினர், அயலவர், தெரிந்தவர் என்ற ஒரு பெரிய வட்டத்துக்கு உருவாக்கி விடுவதைத் தவிர்க்க முடியாது.

இவ்வாறான கொடுமைகளைச் செய்வோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்ன என்பதாவது ஊடகங்களில் வெளிவருவதில்லை. இந்தப் பிரச்சினையை அவர்கள் கணக்கில் எடுக்கிறார்களா இல்லையா என்பதே
தெரிவதில்லை. ஒரு முஸ்லிம் தேசத்தில் இந்த விபரங்கள் மிக வெளிப்படையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். இருட்டுக்குள்ளேயே யாவற்றையும் அடக்கி விடுவதானது இஸ்லாம் பற்றிய
தவறான கருத்துக்கள் பரவவே வழி செய்யும்.

இவற்றில் அவதானம் செலுத்தாமல் இஸ்லாமியப் பிரசாரத்துக்கு லட்சம் லட்சமாகப் பணம் செலவழிப்பதிலும் பள்ளிவாசல் கட்டுவதிலும் குர்ஆன் பிரதி அச்சிடுவதிலும் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு திருப்திப் படுவதில் அர்த்தங்கள் இருக்குமா என்று புரியவில்லை.

இராஜதந்திர, அரசியல் பார்வையில் உலகளாவிய முஸ்லிம் சகோதரத்துவக் கட்டமைப்பை விட இன்ன தேசத்தைச் சார்ந்தவர்கள் என்ற விடயமே முற்படுத்தப்படும் அம்சமாக இருக்கும். அவர்கள் எந்த இனமாக இருந்தாலும் சரியே.

ஒரு பிரதேசத்துப் பள்ளிவாசலை பெரும்பான்மையோர் தாக்கிய போது அது குறித்து ஒரு அரசியல் முக்கியஸ்தர் ஜனாதிபதியிடம் சொன்ன போது, “ஒரு தெருவுக்கு எதற்காக இரண்டு பள்ளிவாசல்கள்?” என்று கேட்டதாக அக்காலப்பிரிவில் காற்றுவாக்கில் ஒரு செய்தி வந்தது. (தர்க்கங்களை விடுவோம்.)

மற்றொரு முறை இதே போல் இவர்கள் இலங்கை முஸ்லிம்கள் விடயமாக ஜனாதிபதியைச் சந்திக்கும் போது (தொழில் வழங்கும் நாடுகள் )ஒவ்வொரு நாட்டிலும் இலங்கையருக்கு நடந்த கொடுமைகள்  பற்றிய தகவல்களை ஓர் ஆவணமாக இவர்கள் முன்னால் போட்டு இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று கேட்டால் சொல்வதற்குப் பதில் இருக்க வேண்டும்!


Monday, April 15, 2013

உங்களுக்கான கேள்விகள்!



முப்பது ஆண்டு களாய் முக்கு ளித்த ரத்தத்தில்
மூச்சடங்கிப் போகவில்லையா - உங்கள்
மூர்க்கம் இன்னும் தீரவில்லையா?

எப்போது தீரும் என்று ஏக்கங் கொண்ட நெஞ்சங்களை
ஏமாற்றும் வஞ்சம் இல்லையா - இனியும்
இந்நாட்டில் அமைதி இல்லையா?


நடுக்கடலில் மிதந்திடினும் நாலு மதம் கொண்ட மக்கள்
நண்பரென வாழ்ந்ததி்லலையா - இங்கு
நன்மைகள் விளைந்ததில்லையா?

துடுக்குத் தனத்தோடு நின்று துவேசத்தைக் கக்கிநிற்றல்
துரோகமென்று தெரியல்லையா - நாடு
தூளாகிப் போகுமில்லையா?


குட்டக் குட்டக் குனிவதற்கு குரங்குகளே யானாலும்
விட்டுக் கொடுக்காது அல்லவா? - அதனை
விதியெனக் கொள்ளா தல்லவா?

மட்டுப்பட்டு வாழ்ந்த நிலை மலேயேறிப் போயிற்றென்று
மண்டைக்குள் ஏறவில்லையா - உம்
மனச்சாட்சி பேசவில்லையா?


உள்வீட்டுச் சண்டைகளால் உண்டான வேதனைகள்
உள்ளத்தைச் சுட்டதில்லையா - உமக்கு
உண்மைகளே புரிவதில்லையா?

எள்ளாக இருந்திடினும் எல்லோரும் பகிர்ந்து கொண்டால்
இன்பம் ஒரு கோடியல்லவா - எல்லாத்
துன்பங்களும் ஓடுமல்லவா?


தட்டுக்கெட்டு நடந்து தறிகெட்டு அழிவதனை
தர்மம் புறக் கணிக்கவில்லையா - அதைத்
தவிர்ப்பது நலமில்லையா?

விட்டுக் கொடுத் தோம்பி விரல்களைக் கோப்பதில்
விட்டழியும் வெறுப்பு இல்லையா? - விகற்பங்கள்
வேரறுந்து போகுமில்லையா?


அறங்களைப் போதிப்பவர் அறநெறி பிறழ்வது
அவமான மாகுமில்லையா? - அது
அவலத்தைத் தருமில்லையா?

புறத்திலே புண்ணியமும் போர்வைக்குள் புன்மையுமாய்
புகல்வது வெட்கமில்லையா? - நன்மை
அகல்வது துக்கமில்லையா?