Tuesday, January 31, 2012

சுப்ரமண்ய ராஜூ



ஒரு சிறந்த இலக்கிய வாசகனுக்கும் படைப்பாளிக்கும் சுபரமண்ய ராஜூவைத் தெரியாதிருக்க முடியாது.


அவர் தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர். தனித்துத் தெரிபவர்.

பாலகுமாரனின் நாவல்களை ஒன்றும் விடாமல் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சுப்ரமண்ய ராஜூ பாலகுமாரனின் நெருங்கிய இலக்கிய நண்பர் என்பதை அறிய வந்தேன். அவரது எழுத்துக்களைத் தேடியதில் ஒன்றிரண்டு கதைகள் எங்கெங்கோ படிக்கக் கிடைத்தன. அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்களை ஆவலடங்குமளவாவது படித்துக் கொள்வதற்கும் வாய்ப்பிருக்கவில்லை.

2009ல் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது சுப்ரமண்ய ராஜூ கதைகள் முழுத் தொகுப்பு கிடைத்தது. 486 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் சுப்ரமண்ய ராஜீவின் 32 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 2008ல் கிழக்கு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.

இந்த நூலில் முன்னுரையை சுப்ரமண்ய ராஜூவின் நண்பரும் எழுத்தாளருமான தேவகோட்டை வா. மூர்த்தி எழுதியிருக்கிறார். இந்த முன்னுரையைப் பலமுறை நான் படித்து விட்டேன். அவ்வளவு உயிரோட்டம் அதில்.

சுப்ரமண்ய ராஜூபற்றி அவர் எழுதியிருக்கும் சில பந்திகளைத் தரலாம்:-

“எல்லோருக்கும் புன்முறுவல்தான். எல்லோருக்கும் உதவி. எல்லோருக்கும் இன் சொல். எவரிடமும் வெறுப்பில்லை. யாரிடமும் காழ்ப்பில்லை. யாரையும் குறை சொல்வதில்லை. யாரையும் கடிந்ததில்லை. இவைதான் சுப்ரமண்ய ராஜூ.”

“தனக்குப் பரிசாகக் கிடைத்த, தான் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஒரு விலையுயர்ந்த பேனாவை ராஜூவுக்குத் தந்தார் பிரபஞ்சன். ‘இந்தப் பேனாவுக்கு நிங்கள்தான் தகுதி’ என்பது போல.”

“ராஜூவின் சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டு “வாழ்க்கையில் சதா சலிக்கும் கேள்விகளை இவ்வளவு அடக்கமான தொனியில் சித்தரித்த சமகாலத்து எழுத்தாளர் யாரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது” என்ற ரீதியில் கவிஞர். ந. ஜெயபாஸ்கரன் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை ராஜூவிடம் கொடுத்தேன். ‘சமகாலத்து எழுத்தாளர் யாருமில்லை என்று ஜெயபாஸ்கர் எபப்டிச் சொல்ல முடியும்?’ என்று என்னுடன் விவாதித்தான்.”

“பிரபஞ்சனின் பேனா, கல்யாண்ஜியின் கடிதம், ஜெயபாஸ்கரனின் சிநேகம், தீபப்பிரகானின் திருப்தி - இவையெல்லாம்தான் தனக்குத் தங்க மெடல்கள் போலப் பரவசப்பட்டான். ஆனால் அவனது சிறுகதைத் தொகுதிக்கு தமிழக அரசின் முதற்பரிசு கிடைத்ததும் அவனது இயல்பான தன்னடக்கத்தின் விளைவாக ஆச்சரியம் அடைந்தான். அசலான இலக்கியத்துக்கு அரசு பரிசு தந்தது எனக்கும் வியப்புத்தான். ஆனால் ராஜூவின் வியப்பு எனக்கு வியப்பில்லை.”

“ராஜூவின் எழுத்துலக வாழ்க்கையில் முக்கிய மைல் கல் - 1976ம் ஆண்டு கணையாழி இதழ் ஒன்றில் தனது ஆதர்ச சிறுகதைத் தொகுதி என்று சுஜாதா ஒன்றை விவரித்து அதில் சுப்ரமண்ய ராஜூவின் பெயரைச் சேர்த்திருந்ததுதான். புதுமைப் பித்தனுக்கு அத்தொகுதியில் இடமில்லை என்று கூறியிருந்த சுஜாதா, ராஜூவின் பெயரை அதில் சேர்த்திருந்தார்.”

“பின்பற்றியது போலவே ராஜூ உடைத்தெறிந்த நியதிகளும் ஏராளம். ‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’ என்பது ராஜூ, அடிக்கடி குறிப்பிட்ட இன்னொரு நியதி. ஆனால் இந்த நியதியை உடைத்தெறிந்த முதல் ஆளும் அவனே. சுப்ரமண்ய ராஜூ எல்லா விதத்திலும் வித்தியாசமானவன். அதனாலேயே விசேசமானவன்.”

Wednesday, January 25, 2012

பனங்கொட்டை + பிலாக்கொட்டை


நீண்ட நாட்களாக வலைப் பூவில் புதிய பதிவுகளை இடவில்லை.


எழுதுவதற்கும் ஒரு மூட் வரவேண்டாமா? ஓர் உற்சாகம் இல்லையென்றால் எழுதுவது வீண் வேலை. அப்படி எழுதப்படுவதில் எந்த ரசனையும் இருக்காது.

“நீங்கள் எழுதுகிறீர்களோ இல்லையோ தினமும் உங்களது வலைப்பூவைப் பார்வையிடுகிறேன்” என்று ஒரு சகோதரி என்னை நேரில் கண்டபோது சொன்னாள்.

பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் புதிய பதிவுகளை எதிர்பார்த்து வந்து செல்கிறார்கள் என்பதையும் அறியக் கூடியாதக இருக்கிறது.

இன்றைக்கு ஏதாவது ஒரு புதிய பதிவை இடுவோம் என்று நினைத்துக் கொண்டு அவித்த பிலாக் கொட்டைகளை உரித்துச் சாப்பிட்ட படி கணினிக்கு முன்னால் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

எதுவும் தோன்றிவில்லை.

கை பிலாக் கொட்டைகளை உரித்து வாய்க்குள் செலுத்திக் கொண்டிருந்தது.

அட... பிலாக் கொட்டை பற்றி ஒரு பதிவை இடுவோமே... என்ற யோசனை வந்தது. இணையத்தை லேசாகக் குடைந்தேன்.

பலாக் கொட்டைதான் பேச்சு வழக்கில் ‘பிலாக் கொட்டை’யாகியிருக்கிறது.

வட பகுதியில் கற்பகதருவாகப் பனை மரம் கொண்டாடப்படுவதைப் போல தென்னிலங்கையின் கற்பகதரு பிலாதான். உங்களது காணிக்குள்ளேயே பிலாமரம் இருந்தாலும் அதை வெட்டுவதாக இருந்தால் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.

தென்னிலங்கை ஏழை மக்களின் பிரதான கறி பிலாக்காய். பிலாக்காயின் வகைகளுக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. கொழும்பிலும் அண்டிய பிரதேசங்களிலும் உள்ள எல்லா சந்தைகளிலும் ஓர் ஆச்சியோ கிழவரோ பிலாக்காய் பிளந்து சுண்டலுக்கு வேறாகவும் கறி சமைப்பதற்கு வேறாகவும் பிரித்து வைத்து விற்பனை செய்வதைக் காணலாம். பிலாக்காய்க் கறி எனக்கும் மிகவும் பிடித்தமானது. சாப்பிட அமர்ந்து பிலாக்காய்க் கறிக்குள் பிலாக் கொட்டை தேடுவதில் கவனம் செலுத்துவேன்.

இதோ நாளை பழுத்து விடும் என்ற நினையிலுள்ள பலாச் சுளைகளை எடுத்துச் சீனி போட்டு உம்மா சமைத்துத் தந்த கூழ் இன்னும் நாவில் இனிக்கிறது. பாஸ்ட் புட் காலத்தில் இது ஒரு கேவலமான விடயமாகத்தான் தோன்றும். அந்தக் கூழுக்கு இன்னும் நாக்குத் துடிக்கிறது. ஆனால் தாய்வீட்டிலும் சரி, மனைவியும் சரி செய்து தரமாட்டார்கள். ஏனென்றால் அது குடிக்கும் வயது போய்விட்டது. அதாவது சீனி வியாதி வந்தவர்களுக்கு அது “ஹராம்.”

Thursday, January 5, 2012

கவிஞர் அல் அஸூமத்துக்குத் தமிழ் நாட்டில் பரிசு


தமிழ் நாடு, சென்னை, ரஹ்மத் அறக்கட்டளையினர் நடத்திய முகம்மது நபிகள் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நூலுக்கான கைப்பிரதிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அல் அஸூமத் அவர்கள் முதற்பரிசைப் பெற்றுள்ளார்.

முகம்மது நபிகள் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு, முஸ்லிம் அல்லாதாரும் படிக்கும் வகையில் அழகுத் தமிழில் ஆய்வு நடையில் வரலாற்று ஆதாரங்களோடு எழுதப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த கைப்பிரதிகளில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுக்கான பிரதியாக கவிஞர் அல் அஸூமத் அவர்களது நூல் அறிஞர் பெருமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாடறிந்த கவிஞரும் எழுத்தாளருமான கவிஞர் அல் அஸூமத் அவர்கள் 2002ம் ஆண்டு தமது ‘வெள்ளை மரம்’ என்ற சிறுகதை நூலுக்கான தேசிய அரச சாஹித்திய விருதையும் ‘சிரித்திரன் சுந்தர் நினைவு விருதையும் பெற்றவர். அவரது ‘புலராப் பொழுதுகள்’ குறுங்காவியநூல் 1984ல் முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருதையும் ‘அறுவடைக் கனவுகள்’ நாவல் கடந்த ஆண்டு தமிழியல் விருதையும் பெற்றன. இவரது ‘குரல் வழிக் கவிதைகள்’ என்ற நூலுக்கு யாழ். இலக்கிய வட்டம் 2009ல் மிகச் சிறந்த கவிதை நூலுக்கான விருதை வழங்கியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக இவர் நடத்தி வந்த ‘கவிதைச் சரம்’ நிகழ்ச்சி பல கவிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. தொலைக் காட்சி, வானொலி, மேடைக் கவியரங்குகள் பலவற்றில் தலைமை வகித்த அனுபவமிக்க கவிஞரான கலாபூஷணம் அல் அஸூமத் அவர்கள் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் ‘கவித் தாரகை’ விருது வழங்கியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினரால் 2008ம் ஆண்டு ‘இலக்கிய சாகரம்’ பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டவர்.

கடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 13வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ‘தமிழ் மாமணி’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூன்று இலங்கையருள் கவிஞர் அல் அஸூமத் அவர்களும் ஒருவராவர். மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் அல் அஸ_மத் அவர்கள் இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும் சிறந்த தமிழறிவாளரும் ஆவார். அல் அஸூமத் அவர்களது அலைபேசி இல
- 078 5182898.