Tuesday, January 21, 2014

காஸாவிலிருந்து ஒரு கடிதம்!


அன்புள்ள முஸ்தஃபா,

இப்போதுதான் உனது கடிதம் கிடைத்தது. ஸெக்ரமென் டோவில் உன்னுடன் நான் தங்கியிருப்பதற்கு அவசியமான எல்லா ஏற்பாடுகளையும் நீ செய்திருப்பதை உனது கடிதம் சொன்னது. கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் கற்பதற்கு எனக்கு அனுமதி கிடைத்திருக்கும் செய்தியும் எனக்குக் கிடைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும், அன்புள்ள நண்பனே.

ஆனால் நான் உனக்குச் சொல்லப் போகும் செய்தி உனக்கு விசித்திரமாகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். எப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் இருக்கும் சரியான, தெளிவான நிலை குறித்துச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. இல்லை, நண்பனே... நான் எனது மனதை மாற்றிக் கொண்டேன்.

நீ குறிப்பிட்டிருப்பதைப் போல 'பசுமையும் நீரும் அழகிய முகங்களும்' உள்ள இடத்துக்கு உன்னைத் தொடர்ந்து நான் வரப்போவதில்லை. இல்லை, நான் இங்கேயே இருக்கப் போகிறேன்| ஒரு போதும் இங்கிருந்து வெளியேறப் போவதில்லை!

ஒரே துறையில் நாம் வாழ்வைத் தொடரவில்லை என்பது எனக்கு உண்மையில் மிகவும் மனக் குறையாகவுள்ளது, முஸ்தஃபா. ஒன்றாகவே பயணிப்பது பற்றிய நமது உறுதி மொழியை நீ அடிக்கடி சொல்வது எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த வகையில் 'நாம் செல்வந் தர்களாவோம்' என்று அடிக்கடி நாம் சத்தமிட்டிருக்கிறோம். ஆனால் என்னால் செய்ய முடிந்தது எதுவுமில்லை, நண்பனே. ஆம்| உன்னு டைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கெய்ரோ விமான நிலை யத்தில் நின்றிருந்த அந்த நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அன்று என் முன்னால் நின்றிருந்த உனது வட்டமான முகம் அமைதி யாகவிருந்தது. இலேசான சுருக்கங்களைத் தவிர, காஸாவின் ஸாஜியா வில் வளர்ந்தபோது இருந்தது போலவே உன் முகம் மாறாமல் இருக் கிறது. நாம் ஒன்றாகவே வளர்ந்தோம்| ஒருவரையொருவர்; நன்றாகப் புரிந்து கொண்டிருந்தோம். கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டுடன் இருந்தோம். ஆனால்...

'விமானம் கிளம்புவதற்குக் கால் மணி நேரம் இருக்கிறது. இப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிராதே. கேட்டுக் கொள்! அடுத்த வருடம் நீ குவைத்துக்குப் போவாய். கிடைக்கும் உனது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமித்து எடுத்துக் கொண்டு காஸாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியாவுக்குச் சென்று உன்னை நிலை நிறுத்திக் கொள். நாம் ஓன்றாகவே தொடங்கினோம். ஒன்றாகவே தொடருவோம்!'

அந்தக் கணத்தில் வேகமாக அசையும் உனது உதடுகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். காற் புள்ளியோ முற்றுப் புள் ளியோ இல்லாமல் பேசுவது உனது பாணி. ஆனால் அந்த விமானப் பயணத்தில் நீ முழுமையாகத் திருப்தியடையவில்லை என்று என்னால் உணர முடிந்தது. அதற்கான நியாயமான காரணங்க ளெதையும் நீ தெரிவிக்கவில்லை. அந்த வலி எனக்கும் இருந்தது. ஆனாலும் 'ஏன் காஸாவைக் கைவிட்டு நாம் பறந்து விடக் கூடாது? ஏன் நாம் போகக் கூடாது?' என்ற தெளிவான சிந்தனையிருந்தது.

உனது நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குவைத்தின் கல்வியமைச்சு எனக்குத் தராத போதும் உனக்கு ஒரு தொழிலைத் தந்தது. அந்த அமைச்சினூடாக ஒரு சிறு தொகையை எனக்கு அனுப்பினாய். அவர்களிடம் நான் கடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினாய். ஏனெனில் நான் அசௌகரியப் பட்டு விடக் கூடும் என்று பயந்தாய். எனது குடும்பச் சூழல் பற்றி உள்ளும் புறமும் நீ அறிந்து வைத்திருந்தாய். எனக்குக் கிடைக்கும் சம்பளம் எனது தாயாரையும் எனது சகோதரரின் விதவையான மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் கவனிக்கப் போதுமான தாக இல்லை என்பதை நீ அறிந்திருந்தாய்.

'கவனமாகக் கேட்டுக் கொள். ஒவ்வொரு நாளும் எழுது... ஒவ்வொரு மணித்தியாலம், ஒவ்வொரு நிமிடம் பற்றியும் எனக்கு எழுது. விமானம் புறப்படப் போகிறது... நான் கிளம்புகிறேன்... இல்லை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை...'

உனது உதடுகள் எனது கன்னத்தில் பதிந்தன. விமானத்தின் பக்கம் நீ முகத்தைத் திருப்பிக் கொண்டாய். மீண்டும் நீ திரும்பி என்னைப் பார்க்கையில் உனது கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன்.

சில காலத்துக்குப் பின் குவைத் கல்வியமைச்சு எனக்கும் ஒரு தொழில் வாய்ப்பை வழங்கியது. அங்கு எனது வாழ்க்கை எப்படிக் கழிந்தது என்கிற விபரத்தை உனக்கு நான் திரும்பச் சொல்லத் தேவை யில்லை. எப்போதும் எல்லாவற்றைப் பற்றியும் நான் உனக்கு எழுதியிருக்கிறேன்.நான் ஒரு சாதாரணனாக இருந்த போதும் பசை போட்டு ஒட்டி வைத்தாற் போன்று மாட்டிக் கொண்டதான ஒரு வெறுமையை உணர்ந்தேன். கொடுந் தனிமையை அனுபவித்தேன். அலுப்பூட்டும் ஒரே விதமான வேலைச் சூழலில் அழுகும் நிலையிலி ருந்தேன். எல்லாமே சூடானதாகவும் ஒட்டிக் கொண்டது போன்றது மான ஒரு விசித்திரமான உணர்வு. எனது முழு வாழ்விலும் அது ஒரு சறுக்கல். சகலதுமே மாசக் கடைசியில் தங்கியிருந்தன.

வருட மத்தியில் ச:பாவில் யூதர்கள் குண்டு வீசினார்கள். காஸாவைத் தாக்கினார்கள். நமது காஸா கொழுந்து விட்டெரிந்தது. எனது வேலைச் சூழலில் அந்தச் சம்பவம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். ஆனால் நான் வெளியேற வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இத்தனை காலம் சிரமப்பட்டதற்காக எனக்குப் பின்னால் இருக்கின்ற காஸாவை விட்டுப் பசுமை மிகுந்த கலிஃபோர்னியாவுக்குச் சென்று எனக்காக நான் வாழ வேண்டும்| எனக்காக மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணினேன். காஸாவையும் அங்கு வாழ்வோரையும் வெறுத்தேன். நாலா புறமும் முற்றுகையிடப்பட்டுத் துண்டிக்கப்பட்ட நகரத்தின் சகல அம்சங்களுமே நோயுற்ற மனிதனொருவனால் சாம்பல் நிறத்தில் வரையப்பட்ட கோணல் மாணலான சித்திரங்களைப் போல் எனக்குக் காட்சியளித்தன.

ஆம்! எனது தாயாருக்கும் எனது சகோதரரின் விதவை மனைவிக்கும் நான்கு பிள்ளைகளுக்கும் அவர்கள் வாழ்வதற்காக ஒரு சிறு தொகைப் பணத்தை அனுப்பவேண்டியிருந்தது. இந்தக் கடைசி முடிச்சிலிருந்தும் கூட என்னை விடுவித்துக் கொள்ள எண்ணினேன். ஏழு வருடங்களாக எனது மூக்கை நிறைத்திருந்த தோல்வியின் துர் நாற்றத்திலிருந்து மிகத் தூரத்திலிருக்கின்ற அழகும் பசுமையும் நிறைந்த கலிஃபோர்னியாவை அடைய நினைத்தேன்.


கஸ்ஸான் கனஃபானி

என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் எனது சகோதரரின் குழந்தைகள், அவர்களது விதவைத் தாய் ஆகியோர் மீதான அனுதாப மானது செங்குத்தாக என்னைத் தள்ளும் எனது சோகங்களை விடப் பெரியவை அல்ல. கடந்த காலங்களைப் போல் என்னை மீண்டும் கீழே தள்ளிச் செல்ல நான் அனுமதிக்க முடியாது. நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்!

இந்த உணர்வுகளை நீ அறிவாய் முஸ்தஃபா. இவற்றில் உனக்கு உண்மையான அனுபவம் உண்டு. நாட்டை விட்டு ஓடிச் செல்லும் ஆர்வத்தை மழுங்கடித்த, காஸாவுடன் நாம் கொண்டிருந்த தெளிவாய் வரையறுக்கப்படாத  அந்த உறவுதான் என்ன? இதில் ஒரு தெளிவை அடைந்து கொள்வது பற்றி நாம் ஏன் ஆராய்ந்து பார்க்க வில்லை? இந்தக் காயங்களுடன் கூடிய தோல்வியைக் கைவிட்டு விட்டு ஆழ்ந்த ஆறுதலையும் பிரகாசமான எதிர்காலத்தையும் நோக்கி நாம் ஏன் நகரவில்லை. ஏன்? சரியாக அதை நாம் அறிந்திருக்க வில்லை.



ஜூன் மாதம் விடுமுறையில் சென்ற போது எனது பொருட் களையெல்லாம் ஒழுங்குபடுத்தினேன். சந்தோஷகரமான ஒரு பயணத்தை எதிர்பார்த்திருந்தேன். பயணத்துக்கான சின்னச் சின்ன ஏற்பாடுகளே என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்தது போல் இனிமையாக இருந்தன. அறுவைத் தொழுவத்துக்கு அருகில் உள்ள, அலைகளால் கொண்டுவரப்பட்ட, துருப்பிடித்த நத்தைக் கோதுக ளால் நிறைந்த இறுகிய மணல் மேடாக காஸா எனக்குத் தோற்ற மளித்தது. நோயுற்றிருக்கும் ஒருவனின் உறக்கத்தில் உள்ள மனக் கிலியை விட நோவினை தரக் கூடியதாக ஒடுக்கமான வீதிகளும் நீட்டிக் கொண்டிருக்கும் :பெல்கனிகளும் கொண்ட காஸா இருந்தது. இந்த காஸா... செம்மறியாட்டுச் சிறு மந்தையைத் தனது திசை நோக்கித் திருப்பும் ஊற்றுப் போல ஒரு மனிதனைத் தனது குடும்பம், வீடு மற்றும் நினைவுகளை நோக்கி நகர வைக்கும் மறைமுகமான காரணிகள் யாவை...? எனக்குத் தெரியவில்லை!

அன்று காலை எனது தாயாரின் வீட்டுக்குச் சென்றது ஞாபகம் இருக்கிறது. என்னைக் கண்டதும் இறந்த எனது சகோத ரரின் மனைவி கேவி அழுதாள். காயமுற்று காஸா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மகள் நாதியாவை அன்று பிற்பகல் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். உனக்கு நாதியாவைத் தெரியுமா? எனது சகோதரனின் பதின் மூன்று வயதான அழகிய மகளை உனக்குத் தெரியுமா?

அன்று பிற்பகல் அப்பிள் பழங்களை வாங்கிக் கொண்டு நாதியாவைப் பார்க்கப் படியிறங்கினேன். எனது தாயாரும் மதினியும் என் கண்ணில் படாமல் மறைந்திருந்தது ஏதோ ஒன்று நடந்திருப் பதை எனக்கு உணர்த்தியது. அவர்களால் என்னிடம் சொல்ல முடியாத ஒன்று, நான் தலையிட முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது என்று யூகித்தேன். நாதியாவின் மீது நான் வைத்திருந்த அன்பு என் உணர்வுடன் இணைந்த ஒன்று. இந்த உணர்வு இவ்வயதினர் எல்லோ ரிலும் நான் அன்பு வைக்கக் காரணமாக இருந்தது. அதுவே தோல்வி யையும் இடப்பெயர்வையும் கொண்டு வந்து ஒரு வகைச் சமூக விலகலெனச் சொல்லத் தகுந்த சந்தோசமான வாழ்வு பற்றிய சிந்தனையை ஏற்படுத்தியது.

அந்த நிமிடத்தில் என்ன நடந்தது? எனக்குத் தெரியவில்லை. அந்த அறைக்குள் நான் நுழைந்த போது அது மிக அமைதியாக இருந்தது. எவ்வளவு நோவுள்ள காயத்துடனும் கொடுமையான வருத்தங்களுடனும் இருந்த போதிலும்; பிள்ளைகளிடமும் ஒரு வித தெய்வீகத் தன்மை இருக்கிறது.

நாதியா கட்டிலில் படுத்திருந்தாள். அவள் படுத்திருந்த தலையணையில் அவளது அடர்ந்த கூந்தல் கற்றை அலையலையாக யாக விரிந்து கிடந்தது. அவளது கண்களில் ஆழமான அமைதி தென்பட்டது. எனினும் மின்னும் அவளது பெரு விழிகளுக்குள் எப்போதும் கண்ணீர் ஊறிச் சுரந்து கொண்டிருந்தது. அவளது முகம் சாந்தமாயிருந்த போதும் இன்னும் பேசுவதற்குச் சக்தியுள்ள ஆனால் சித்திரவதைக்குள்ளான ஒரு தீர்க்கதரிசியின் முகம் போலும் இருந் தது. நாதியா சிறு பிள்ளை. ஆனால் பார்ப்பதற்கு பிள்ளைப் பருவத் தைத் தாண்டியவளைப் போலத் தெரிந்தாள். ஒரு சிறுமியை விட வயது கூடியவளாக, அதை விடவும் வயதானவளாகத் தெரிந்தாள்.

'நாதியா!'

நான் தான் அழைத்தேனா அல்லது எனக்குப் பின்னால் வேறு யாராவது அழைத்தார்களா என்று எனக்கே சரியாக நிச்சய மில்லை. நாதியா கண்ணை உயர்த்தி என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையிலேயே கொதிக்கும் தேனீர்க் கோப்பைக்குள் விழுந்த சீனிக் கட்டியைப் போல நான் கரைந்து போனேன்.

ஒரு சின்னப் புன்னகையுடன் வெளிவந்த அவளது மெல்லிய குரல் என் காதில் விழுந்தது.

'அங்கள்... இப்போதுதான் குவைத்திலிருந்து வந்தீர்களா?'

அந்தக் குரல் அவளது தொண்டைக்குள்ளேயே உடைந்து வெளிவந்தது. தனது கைகளால் ஊன்றி நிமிர்ந்து கட்டிலில் சாய்ந்த வாக்கில் அமர்ந்தாள். நான் அவளது முதுகைத் தடவி அவளது அருகில் அமர்ந்தேன்.

'நாதியா, குவைத்திலிருந்து உனக்குப் பரிசுப் பொருட்கள் கொண்டு வந்திருக்கிறேன். நிறையப் பொருட்கள். நீ முற்று முழுதாகக் குணமடைந்து எனது வீட்டுக்கு வா. அவை எல்லாவற்றையும் உனக்குத் தருகிறேன். சிவப்பு நிறக் காற்சட்டை வேண்டும் என்று எனக்கு எழுதிக் கேட்டிருந் தாய் அல்லவா... நான் கொண்டு வந்திருக்கிறேன்.'

அந்த இறுக்கமான சூழலில் வெளிப்பட்ட பொய் அது. நான் என்னை மறந்து உளறியதை, நான் முதன் முதலாக உண்மை பேசுகிறேன் என்பது போல் நினைத்துக் கொண்டேன். நாதியா மின் சாரம் தாக்கியதைப் போல் திடுக்கிட்டு இறுக்கமான மௌனத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். நாதியாவின் கண்ணீர்த் துளிகள் எனது புறங்கையை நனைப்பதை உணர்ந்தேன்.

'பேசு... நாதியா... உனக்கு சிவப்பு நிறக் காற்சட்டை வேண்டாமா...?'

நாதியா என் மீது பார்வையை உயர்த்தினாள். அவள் பேச ஆரம்பிப்பது போலத் தோன்றியது. ஆனால் நிறுத்திக் கொண்டாள். பின்னர் பற்களை உரசுவது போல் தெரிந்தது. மிகத் தொலைவி லிருந்து கேட்பது போல் ஒலித்த அவளது குரலை நான் கேட்டேன்.

'அங்கள்!'

அவள் கையை உயர்த்தி, வெள்ளைத் துணியால் சுற்றப்பட் டிருந்த விரல்களால் அடித் தொடைப் பகுதியிலிருந்து துண்டிக்கப் பட்ட தனது கால் பிரதேசத்தைச் சுட்டிக் காட்டினாள்.

அன்பு நண்பா... அடித் தொடைப் பகுதியிலிருந்து துண்டிக் கப்பட்ட நாதியாவின் காலை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ஆழ்ந்த துயரத்தில் வார்க்கப்பட்டு அதுவே காலாதிகாலத் துக்கும் நிரந்தரமாகி விட்டிருக்கும் அவளது முகத்தை மறந்து விட முடியுமா? நாதியாவுக்குக் கொடுப்பதற்கென நான் கொண்டு வந்திருந்த இரண்டு றாத்தல் பாரமுள்ள பொருட்கள் மௌனமாய் என்னைப் பார்த்துப் பரிகசிக்க, அவற்றை இறுக்கமாகப்; பற்றிப் பிடித்தபடி அன்று காஸா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி னேன். சுட்டெரிக்கும் சூரியன் இரத்த நிறத்தில் காஸாத் தெருவெங் கும் நிறைந்திருந்தது. காஸா புதியதாகத் தெரிந்தது, முஸ்தஃபா! நீயோ நானோ அதை இப்படி இதற்கு முன்னர் பார்த்ததில்லை.

நாம் வாழ்ந்த ஸாஜியா சதுக்கத்தின் நுழைவாயில் பகுதியில் குவிந்து கிடந்த கற்களுக்கு ஓர் அர்த்தம் இருந்தது போல் எனக்குத் தோன்றியது. அந்த அர்த்தத்தை வெளிப்படுத்துவது அவற்றின் நோக்கமே தவிர வேறு எந்தக் காரணங்களையும் அதற்குக் கற்பிக்க முடியவில்லை. நல்ல மனிதர்களுடன் நாம் வாழ்ந்த, ஏழுவருடத் தோல்வியைச் சுமந்த இந்த காஸா, ஏதோ ஒரு வகையில் புதியதாகத் தோற்றமளிக்கிறது எனக்கு. இது ஒரு புதிய ஆரம்பமாகவே எனக்குத் தோன்றுகிறது.

நான்  வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பிரதான வீதி யைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அது சபாத்தை நோக்கிய நீண்ட மிக நீண்ட தூரத்தின் ஆரம்பமாகும். காஸாவில் எல்லாமே அழுகையைக் கட்டுப்படுத்த முடியாத துயரத்தில் மூழ்கியிருக்கின் றன. இது ஒரு சவால். அதாவது துண்டிக்கப்பட்ட காலை மீளப் பொருத்துவது போன்ற சவாலை விடவும் முக்கியமான விடயம் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.

காஸாவின் தெருக்களில் நான் நடந்து சென்றேன். அத் தெருக்கள் எங்கும் கண்கள் கூசும் வெளிச்சம். வீட்டுக்குள் விழுந்து வெடித்த குண்டிலிருந்தும் அதன் தீ நாக்குகளிலிருந்தும் தனது தங்கைகளையும் தம்பிகளையும்  பாதுகாத்த காரணத்தால் நாதியா தனது காலை இழந்தாள் என்று எனக்குச் சொன்னார்கள். நாதியா தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம்... அவள் அங்கிருந்து ஓடித் தப்பித் தனது காலைப் பாதுகாத்;திருக்கலாம்.... ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை.

ஏன்?

இல்லை நண்பனே... நான் ஸெக்ரமென்டோ வர மாட் டேன்... அது பற்றி எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது. சிறு பராயத்தில் நாம் துவங்கியதை முடிப்பதற்கில்லை என்றுணர்கிறேன். காஸாவை விட்டுச் செல்லும் போது மறைந்து கிடந்த உணர்வு... அந்தச் சிறு உணர்வு ஆழமாகவும் பிரமாண்டமாகவும் வளர வேண்டும். இழிவு நிறைந்த இந்தத் தோல்விகளுக்கு நடுவே உன்னை நீ தேடிக் கண்டடைய உனக்குள் அது விசாலமாகப் பரவ வேண்டும்.

நான் உன்னிடம் வரப்போவதில்லை. ஆனால் நீ எம்மிடம் திரும்பி வா. தொடையிலிருந்து துண்டிக்கப்பட்ட நாதியாவின் காலில் இருந்து புதியதொரு பாடத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் வாழ்வதற்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வதற்காகவும் திரும்பி வா!

திரும்பி வா, நண்பனே... நாங்கள் எல்லோரும் உனக்காகக் காத்திருக்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------
இக்கதையை எழுதிய புரட்சிகர எழுத்தாளரும் அரசியற் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கஸ்ஸான் பாயிஸ் கனஃபானி பலஸ்தீனின் அக்ரே நகரில் 1936ல் சட்டத்தரணி ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர். தமது நகரத்தின் ஒரு பகுதி இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து லெபனானிலும் சிரியாவிலும் அகதி முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர். 
கனஃபானியை 1972ம் ஆண்டு ஜூலை 8ம் திகதி அவரது காரில் குண்டு பொருத்தி வெடிக்க வைத்துக் கொலை செய்தனர். இந்தக் கொலையைத் தாமே செய்ததாக இஸ்ரேலின் மொஸாட் பின்னர் உரிமை கோரியதாக அறியக் கிடைக்கிறது. நெறதநசளநலளழடனையசவைல இணையத் தளத்திலிருந்து பெறப்பட்ட இக்கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் விபரம் கிடைக்க வில்லை.
---------------------------------------------------------------------------------------------------------
இக்கதை “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” என்ற அரபுமொழிச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.                                                                      



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Unknown said...

அடித் தொடைப் பகுதியிலிருந்து துண்டிக் கப்பட்ட நாதியாவின் காலை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது