Tuesday, January 6, 2015

நுணலும் தன் வாயால் கெடும்!


 - 10 -

குழப்பங்களும் பிரச்சளைகளும் இல்லாத குடும்பங்கள் உள்ளனவா என்று கேட்டால் 'இல்லை!' என்ற சொல்லே பதிலாக வரும்.

வெளியே சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் தெரியும் ஒரு குடும்பத்துக்குள் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்.  சகோதர, சகோதரிகளுக்கிடையில், தாய் - தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையில் (குறைந்தது ஒரு பிள்ளையுடனாயினும்) சண்டையும் சச்சரவும் இல்லாவிடினும் மனக் கசப்புகள் வருவது சகஜமானது. எவ்வளவு கசப்பான விடயங்களாக இருந்த போதும் அவற்றைச் சகித்துக் கொண்டுதான் ஒவ்வொரு குடும்பமும் வாழ்ந்து வருகிறது. குடும்ப மானம் கருதி அவை வெளியில் வருவதில்லை.

அக்குடும்பத்தில் எதையும் சகிக்கத் திராணியற்ற ஒருவர், கோபம் மிக்க ஒருவர், சுயநலம் மிக்க ஒருவர் அடங்கியிருப்பாராயின் அவர் மூலம் பிரச்சனை வெளியில் வருமே தவிர, வேறு வழிகளில் அவை வெளியாவதில்லை.

ஒரு தெருவில் அல்லது ஒரு மஹல்லாவுக்குள் அல்லது ஒரு வட்டாரத்துக்குள் ஆகக் குறைந்தது ஓர் ஊருக்குள் வாழும் யாராவது ஒருவருடன் மற்றொருவருக்கு மனக் கசப்போ, சண்டையோ, சச்சரவோ இல்லாமலிருப்பதில்லை.

இவ்வாறான பூசல்களும் சச்சரவுகளும் பெரும்பாலும் அடக்கியே வாசிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இவை பெரிது படுத்தப்பட்டால் அது முதலில் தெருவுக்கு வரும். பின்னர் பொலீஸ் நிலையத்துக்கும் பின்னர் நீதிமன்றுக்கும் செல்லும். அதன் பின்னர் வாழ் நாள் முழுவதும் இரண்டு திறத்தாரும் பரம்பரை பரம்பரையாக மனதில் வைரம் வளர்த்துச் சீரழிந்து போவார்கள்.

ஒரு விடயம் பெரிது படுத்தப்படுவது என்பது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளின் தன்மையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கிறது. எப்போது அளவுக்கு மீறி வார்த்தைகள் வெளிவருகின்றனவோ அவை எந்தளவு தடிப்பத்துடன் வெளிவருகின்றனவோ அந்த அளவுக்குப் பிரச்சனை பெரிதாகி விடுகிறது. ஒருவர் மற்றவருக்குப் பயன்படுத்தும் சொற்கள் அல்லது வார்த்தைகள் அழுக்கானவையாகவும் அசூசையானவையாகவும் அகௌரவப்படுத்துவனவாகவும் அமையும் போது பிரச்சனையின் அடிப்படை தவிர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் முன்னிலை பெற்று விடுகின்றன. 'அவன் எனக்கு இப்படிச் சொன்னதற்காக நான் விடமாட்டேன்' என்று ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

ஒரு மனிதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுச் சரியாக இருந்த போதும் அதை முன்வைப்பதற்கான நல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும். பிழையான வார்த்தை பயன்படுத்தப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டின் பெறுமானம் குறைந்து விடுகிறது. அதே வேளை குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளில் ஆத்திரப்பட்டு ஆத்திரத்தில் கன்னத்தில் அறையவும் கூடும். சிலவேளை இப்பிரச்சனை ஒரு கொலையிலே கூட முடிவடையலாம்.

எல்லாவற்றுக்கும் ஒரு தர்மம் உண்டு, எல்லையும் உண்டு. அது எப்போதேல்லாம் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் விரும்பத்தகாதவை நடந்து முடிந்து விடுகின்றன. குடும்பங்களில், சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிவேரைத் தோண்டிச் சென்றால் அது ஒரு மோசாமான வார்த்தையாக இருக்கக் காண்போம்.

எந்த ஒரு நிலையிலும் ஒரு மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அவனது தாய், தந்தையரை, குடும்பப் பாரம்பரியத்தை, அவனுடைய வளர்ப்பை, அவன் படித்த பாடசாலையை, கற்பித்த ஆசிரியர்களை, அவனுடைய சூழலை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளை, புரிந்துணர்வையெல்லாம் பிரதிபலிக்கக் கூடியவை.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் ஒருகாலத்தில் அரசியல்வாதிகளே அரசியல்வாதிகளை விமர்சிப்பதும் கிண்டலடிப்பதும் மட்டுமே பத்திரிகைகளில் படிக்கக் கூடியதாக இருந்தது. ஏனையவர்களின் விமர்சனங்கள் முடிதிருத்தும் நிலையங்கள், கிராமத்துத் தேனீர்க்கடை பெஞ்சுகள் போன்றவற்றிலே இடம்பெற்று வந்தன. இவற்றின் இடத்தை இப்போது சமூக வலைத்தளங்கள் பிடித்துக் கொண்டன. எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் தமது எண்ணங்களையும் விமர்சனங்களையும் பகிரும் அற்புதமான வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

அரசியல் பற்றிய விமர்சனங்கள், கிண்டல்கள் ஏற்கக் கூடியவைதாம். ஆனால் அந்த எல்லைக்கு மேல் செல்லும் போது அது ஒரு கண்ணியம் பிறழ்ந்த நிலைக்குப் பலரை நகர்த்தி விடுகிறது. பேசத் தகாத, எழுத்தத் தகாத மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், கண்ணியமும் ஒழுக்கமும் அற்ற தூற்றல்கள், தூஷணங்கள் மலிந்து போன நிலையில் இன்றைய பொதுத் தளங்கள் நாற்றமெடுத்துக் கிடப்பதைக் காண்கிறோம்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்தத் தூஷணங்களும் தூற்றுதல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலேயே செய்யப்படுவதுதான். 30 வருட காலப் போரில் சிதைந்து சின்னாபின்னமாகி இன்னும் வாழ்வும் இல்லாமல் சாவும் இல்லாமல் வாடும் தமிழ் சமூகத்தின் அரசியலில் ஆயிரம் பிரச்சனைகளும் ஆயிரம் சிக்கல்களும் பிக்கல் பிடுங்கல்களும் இருக்கின்றன. பலநூறு பிரிவுகள் அவர்களுக்குள் இருக்கின்றன். ஆனால் நொந்து போன நிலையிலும் அவர்கள் எந்தவொரு அரசியல்வாதி மீதும் எந்தவொரு எதிர் கருத்துக் கொண்டவர் மீதும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதை நான் கண்டதில்லை.

இன்று இஸ்லாமிய ஒழுக்கமும் பண்பாடும் நன்னடத்தையும் பேசாத இளைஞர்கள் அரிது. இஸ்லாம் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற வாழ்வு நெறி என்று தேரியாத இளைஞர்கள் கிடையாது. ஆனால் அரசியலிலும் மார்க்க விவகாரங்களிலும் மாற்றுக் கருத்தாளர்களைத் தாக்குவதில் ராஜ நாகங்களைப் போல் இவர்கள் விஷங்கக்குவதைப் பார்க்கையில் துன்பமாய் இருக்கிறது.

இஸ்லாம் என்ற ஜோதியை வைத்திருப்பவர்கள் தத்தமது வீடுகளைக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

(நன்றி - மீள்பார்வை)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: